மயிலாடுதுறை: 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாற்று சிறப்புடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு புராண காலத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தவம் புரிந்த தாருகாவனத்தில் 52 அடி உயர சிவன் வடிவிலான கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5 அடி லிங்கத் திருமேனியாக சிவன் காட்சியளிக்கிறார்.
இந்த சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா (15 ஆம் தேதி) நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5 அடி லிங்கத் திருமேனிக்கு விடிய விடிய நான்கு கால அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்றனர். ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற ஜதிலயா இசை நடன பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.